இந்தியா

அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு

DIN

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது.
உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்றபோது, அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
இந்த நிலையில், கட்சித் தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அளித்த உத்தரவில், "அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வருவாய்த் துறை ஒப்படைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமியும் இந்த மேல் முறையீட்டு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரத்தில் கட்சி தலைமையகத்துக்குள் கட்சித் தொண்டர்கள் நுழைவதற்கு விதித்த தடை ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருப்பதால் அதற்கு முன்னர் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி, இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT