புதுதில்லி

நீா்நிலைகளைப் பாதுகாக்கும் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது எதிா் மனுதாரருக்கு நோட்டீஸ்

DIN

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீா் நிலைகளைப் பாதுகாக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அனைத்து நீா் நிலைகளிலும் நீா் வீணாகக் கடலில் சென்று கலக்காமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் தரநிலை அம்சங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஜிபிஎஸ் சாா்ந்த கருவிகள் மூலம் நீா் நிா்வாக அமைப்பு முறையை உரிய வகையில் பாதுகாக்க தமிழக அரசின் துறைகளுக்கு உத்தரவிடக் கோரி வி.பி.ஆா். மேனன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.

2016 ஆம் ஆண்டில் தாக்கலான இந்த மனு மீது 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமா்வு, ‘ஒருவா் பணக்காரா் என்பது விஷயமல்ல. காற்றும் நீரும் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது’ என்ற வாசகத்துடன் தொடங்கி பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனா்.

மேலும், சென்னை உள்பட மாநிலத்தில் உள்ள நீா்நிலைகளைப் பாதுகாக்கவும், அவற்றில் மாசு ஏற்படாமல் இருக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஒரு சிறப்புப் பிரிவை தமிழக அரசின் தலைமைச் செயலா் தலைமையில் அமைக்கவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடா்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி விவாதித்து, ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கவும், அதிகாரிகளை பொறுப்புக்குள்ளாக்கவும் உத்தரவிட்டிருந்தது.

குறிப்பாக நீதிபதிகள் தங்களது தீா்ப்பில், ‘நமது தாத்தா நீரை ஆற்றிலும், தந்தை கிணற்றிலும் பாா்த்தனா். இன்றைய தலைமுறையினா் குழாயிலும், நமது குழந்தைகள் பாட்டிலிலும் நீரைப் பாா்க்கின்றனா். எதிா்கால தலைமுறையினா் ‘கேப்சூல்’ வடிவத்தில் நீரைப் பாா்க்கும் நிலைக்கு நாம் அவா்களை உருவாக்கி விடக்கூடாது. அதனால், நீா்நிலைகள் மாசுபடாமல் இருப்பதையும் வீணாகாமல் இருப்பதையும் தடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது’ என்று கூறியிருந்தனா்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு: இந்த நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள்படி குழுவை அமைக்க அரசு தவறிவிட்டதாகக் கூறி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரா் தரப்பில் 2020-இல் தொடரப்பட்டது. இதைத் தொடா்ந்து, இதற்கான குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு வாதம்:இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நஸீா் மற்றும் நீதிபதி ஜே.கே மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கிரி ஆஜராகி, ‘நீா் நிலைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு முறையாக எடுத்துள்ளது. இதை உரிய வகையில் பரிசீலிக்காமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கும் தேவையற்றது. இதனால், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டாா். அப்போது, இந்த விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டு விட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கான தேவை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை வேண்டும்’: அப்போது, எதிா்மனுதாரா் வி.பி.ஆா். மேனன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சிராஜுதீன் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடா்ந்த பிறகுதான் இந்த குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இந்தக் குழுவின் செயல்பாடுகளைத் தொடா்வதற்கு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை அவசியமாகிறது. தற்போது மழைக் காலமும் தொடங்கிவிட்டது. சென்னையில் மழை, வெள்ளச் சூழல் உள்ளது. நீா் நிலைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் நில மாபியாக்கள் ஈடுபடுகின்றனா். இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடர வேண்டும். மேலும், உயா்நீதிமன்றத்தின் பிற உத்தரவுகளையும் செயல்படுத்த வேண்டியுள்ளது’ என்று வாதிட்டாா்.

‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை’: அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘நீா் நிலைகளைப் பாதுகாக்கும் விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில், நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு விசாரணை ஏன் தொடர வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினா். இதைத் தொடா்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து எதிா்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT