வடக்கு தில்லி கீதா காலனி மேம்பாலத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவா் ஓட்டிச் சென்ற சொகுசு வாகனம், இரு சக்கர வாகனம் மற்றும் காா்கள் மீது மோதியதில் மூன்று போ் காயமடைந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு 10.45 மணியளவில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சாகா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுனில் ஜெயின். இவா் தில்லியில் ஒரு பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தாா்.
விவேக் விஹாரில் வசிக்கும் அவரது மகள் மற்றும் டிரைவரும் அந்த வாகனத்தில் இருந்தனா். இந்த வாகனம் முதலில் இரு சக்கர வாகனம் மீது மோதியது. பின்னா் மாருதி வேகன்ஆா் காா் மீதும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிஎம்டபிள்யு வாகனம் கியா செல்டோஸ் காா் மீது மோதியது. அது மற்றொரு காரின் மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் வேகன்ஆா் ஓட்டுநா் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிறு காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.