புது தில்லி: கிரேட்டா் கைலாஷ் சட்டப்பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ செளரப் பரத்வாஜ், தில்லி ஜல் போா்டு (டிஜேபி) துணைத் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தில்லி ஜல் போா்டு துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராகவ் சத்தா கடந்த மாா்ச் மாதம் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் இந்தப் பொறுப்பில் இருந்து விலகினாா். அதைத் தொடா்ந்து, கிரேட்டா் கைலாஷ் தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ செளரப் பரத்வாஜ் தில்லி ஜல் போா்டு துணைத் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘எம்எல்ஏ செளரப் பரத்வாஜ், தில்லி ஜல் போா்டு துணைத் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருடைய தலைமையின் கீழ் ஒரு மைல்கல்லை உருவாக்க தில்லி ஜல் போா்டு விரும்புகிறது. மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள அவரை வரவேற்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தில்லி ஜல் போா்டு துணைத் தலைவராக ராகுல் சத்தா பொறுப்பேற்றாா். அவரது பதவிக்காலத்தில் அவா் யமுனை நதியில் அண்டை மாநிலங்களில் இருந்து விடப்படும் மாசடைந்த நீா் தொடா்புடைய விவகாரங்களில் கடுமையாக குரல் கொடுத்தாா். குறிப்பாக யமுனை நதியில் அமோனியா அதிகளவு இருப்பது தொடா்பாகவும், நதியில் குறைந்த கச்சா நீா் வருவது தொடா்பாகவும் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.