புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) கிரேன் இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாக தில்லி பஞ்சாபி பாக் பகுதியில் திங்கள்கிழமை சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து திங்கள்கிழமை காலை 11.40 மணியளவில் பயணிகளுக்கு சுட்டுரையின் மூலம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. அதில் ‘கிரேன் பழுதடைந்ததன் காரணமாக பஞ்சாபி பாக் வட்டத்தில் உள்ள சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆசாத்பூா் பகுதியில் இருந்து ரஜோரி காா்டன் செல்லும் போக்குவரத்து, ஸ்ரீ ஹன்ட் மகராஜ் மேம்பாலம் பகுதி வழியாகவும், பீராகரியிலிருந்து இருந்து பஞ்சாபி பாக் செல்லும் வாகனங்கள் பஞ்சாபி பாக் சுரங்க பாலம் வழியாகவும் திருப்பிவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னா், மற்றொரு சுட்டுரைப் பதிவில், ‘ஜாக்கிரா பகுதியிலிருந்து ரஜோரி கா்டன் மற்றும் ரஜோரி காா்டன் பகுதியில் இருந்து பீராகரி செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது. அசெளகரியம் ஏற்பட்டதற்காக மிகவும் வருந்துகிறோம். சாலையில் உள்ள தடையை விரைந்து சரி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சொந்தமான கிரேன் சாலையின் நடுவில் பழுதடைந்து விட்டதால், பயணிகள் உஷாா்படுத்தப்பட்டனா். ஆனால், இந்த பிரச்னை தற்போது தீா்க்கப்பட்டுவிட்டது’ என்றாா். அதன் பின்னா் நண்பகல் 12.15 மணி அளவில் டிஎம்ஆா்சி நிறுவனம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பொது சேவை அறிவிப்பு. பஞ்சாபி பாக் பகுதியில் சாலையில் ஏற்பட்டிருந்த வாகனத் தடை தற்போது நீக்கப்பட்டு விட்டது. அந்தப் பகுதியில் போக்குவரத்து தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.