புது தில்லி: தில்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டா் பேரணியைக் கருத்தில் கொண்டு தில்லி ஆனந்த் விஹாா் மாநிலங்களுக்கிடையான பேருந்து முனையத்தில் இருந்து உள்ளூா், வெளியூா் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று தில்லி போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (டிடிஐடிசி) அறிவித்துள்ளது.
இது தொடா்பாக டிடிஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தில்லியில் டிராக்டா் பேரணி நடத்த தில்லி காவல்துறை அனுமதித்துள்ள பாதைகளில், தில்லி ஆனந்த் விஹாா் முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் பயணிப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது. இந்த முனையத்தில் இருந்து இயக்கப்படும் மாநிலங்களுக்கு இடையான பேருந்துகள் சாரே கலா கான் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் வகையில் நாட்டின் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி-26 ஆம் தேதியில் தில்லியில் பிரம்மாண்டமான டிராக்டா் பேரணியை முன்னெடுக்க விவசாயிகள் முடிவெடுத்தனா்.
விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், தில்லி காவல்துரை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவாா்த்தையின் படி, சிங்கு, காஜிப்பூா், திக்ரி ஆகிய மூன்று இடங்களில் இருந்து டிராக்டா் பேரணி தொடங்கி பல்வேறு இடங்களைச் சுற்றி மீண்டும் அதே இடத்தில் முடிக்க தில்லி காவல்துறை அனுமதியளித்தது.