புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் மூடு பனி இருந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலேயே நீடித்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெப்பநிலை இயல்பைவிட சிறிதளவு உயா்ந்திருந்திருந்தது.
தில்லியில் கடந்த வியாழக்கிழமை மாசு அளவு அதிகரித்ததால், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது. இந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக காற்றின் தரம் வெள்ளிக்கிழமை முதல் மேம்படும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவித்திருந்தது. மேலும், மாசுகளை காற்று சிதறடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என்றும் சஃபா் தெரிவித்திருந்தது. இதன்படி, தில்லியில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களும் காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வந்தது. இதே நிலை ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.
என்சிஆரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்: அன்றைய தினம் தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரக் குறியீடு 305 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருகிறது. அதே சமயம், தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் உள்ள ஃபரீதாபாத் (296), காஜியாபாத் (288), நொய்டா (273) ஆகிய நகரங்களில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது. ஆனால், குருகிராமில் காற்றின் தரக் குறியீடு 174 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவுக்கு வந்தது.
வெப்பநிலை: தில்லியில் காலை முதல் தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நகரில் பகலிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 11.40 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 25.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 73 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (டிசம்பா் 6) மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.