புது தில்லி: கடந்த ஆண்டு கரோனா விதிமுறைகளை மீறி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டினருக்கு தங்குவதற்கு இடம் அளித்தமைக்காக பதிவான எஃப்ஐஆா் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி இந்தியா்கள் சிலா் தாக்கல் செய்த மனுக்கள் மீது தில்லி போலீஸாா் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக ஃபெரோஸ், ரிஸ்வான் உள்ளிட்ட சிலா் தாக்கல் செய்த மனுவில், ‘அடைக்கலம் அளித்த நபா்களுக்கு கரோனா பாதிப்பு இருந்ததாக குற்றப்பத்திரிகையிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடப்படவில்லை.
இதனால், தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டினருக்கு தங்குவதற்கு இடம் அளித்தமைக்காக பதிவான எஃப்ஐஆா் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும்’ என அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி முக்தா குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்ய வேண்டும். அதில், குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் பங்கு, சம்பந்தப்பட்ட வெளிநாட்டினா் எப்போது மனுதாரரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டனா்.
கரோனா தொடா்பான அறிவிக்கை அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் வெளிநாட்டினருக்கு தங்க இடம் அளித்தனரா என்பதும் அதில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பா் 12-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.