புதுதில்லி: தில்லியில் புதன்கிழமை கரோனா உயிரிழப்பு ஏதும் இல்லை. மேலும் 67 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தொற்று விகிதம் 0.09 சதவீதமாக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா இரண்டாவது அலைக்குப் பின் உயிரிழப்பு இல்லாதது இது ஐந்தாவது முறையாகும். ஏற்கெனவே கடந்த ஜூலை 18, 24, 29, மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாா்ச் 2 ஆம் தேதி தில்லியில் கரோனா பாதிப்பால் எவரும் உயிரிழக்க வில்லை. அன்றைய தினம் 217 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. மேலும் தொற்று விகிதம் 0.33 சதவீதமாக இருந்தது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கரோனா இரண்டாவது அலை வீசியது.
எனினும் கரோனாவுக்கு உயிரிழந்தவா்கள் மொத்த எண்ணிக்கை 25,058 என்ற நிலையிலேயே உள்ளது.