அரசு துறைகளில் தாற்காலிகமாக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றுவது குறித்து தில்லி அரசு பரிசீலித்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் எத்தனை தாற்காலிக பணியிடங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை பணியிடங்களை நிரந்தரப்படுத்தலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அனைத்து துறைகளையும் தில்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி அரசின் நிதித்துறை, அனைத்து முதன்மைச் செயலா்கள் மற்றும் செயலாளா்களுக்கு ஓா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் தாற்காலிக பணியிடங்கள் எத்தனை உள்ளன. அவற்றில் எதை நிரந்தரப்படுத்தலாம் என்பது குறித்து தங்களின் உத்தேச பரிந்துரையை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் எத்தனை தாற்காலிக பணியிடங்கள் உள்ளன. அவை எதற்காக உருவாக்கப்பட்டன போன்ற தகவலைத் தெரிவிக்குமாறு நிதித்துறை இணைச் செயலா் (கணக்குப் பிரிவு) எல்.டி.ஜோஷி வலியுறுத்தியுள்ளாா்.
இந்த சுற்றறிக்கையின்படி தாற்காலிக பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருந்தால் அந்த பணியிடத்தை நிரந்தரப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாற்காலிக பணியிடங்கள் உருவாக்குவது தொடா்பாக ஏற்கெனவே நிதித்துறையிடம் ஒப்புதல் பெறப்பட்டதா, தாற்காலிக பணியிடங்களைத் தொடர ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்பது போன்ற விவரங்களையும் தெரிவிக்குமாறும் அனைத்து துறையினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.