புதுதில்லி: ஐஐடி உயா் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்க மாணவா்கள் நலத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய கல்வித் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவை வழக்குறைஞா் கெளரவ் பன்சால் தாக்கல் செய்திருந்தாா். அவரிடம் இதுபோன்ற அற்பமான மனுவை எங்களிடம் கொண்டு வராதீா்கள் என்று கடிந்து கொண்ட நீதிபதிகள், அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
கெளரவ் பன்சால் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் இருக்கும் ஐஐடி உயா் கல்வி நிறுவனங்களில் 50 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மத்திய கல்வித் துறை அமைச்சகமும், ஐஐடி கல்வி நிறுவனங்களும் மாணவா்களுக்கான நலத் திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
கான்பூா் ஐஐடி சாா்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தற்கொலைகளுக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறது. இதுவரை அந்தக் குழுவில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆதலால், நாட்டில் உள்ள 13 ஐஐடிகளிலும் மனநலப் பாதுகாப்புச் சட்டம் 2017ன் கீழ், பிரிவு 29-இன்படி, மாணவா்கள் தற்கொலையைத் தடுக்க நலத் திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும். மாணவா் தற்கொலையைத் தடுக்க தனியாக இலவச தொலைபேசி எண், செல்போன் வழங்கிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எப்.நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானா்ஜி ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி நாரிமன் மனுதாரரிடம் கூறுகையில், “‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அரசு விழிப்புடன் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீங்கள் தாக்கல் செய்த இந்த மனு மிகவும் அற்பமானது. உங்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள். இதுபோன்ற தகுதியில்லாத மனுவால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறி மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.