புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா விதிகளை மீறியதற்காக ஜூன் 15 முதல் செப்டம்பா் 23 வரையிலான காலத்தில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட அபராத நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தில்லி போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் மேலும் தெரிவித்ததாவது: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் எச்சில் துப்புதல், பான், குட்கா மற்றும் புகையிலையைப் பயன்படுத்துதல், தனிமை விதிகளைக் கடைப்பிடிக்காதது, சமூக இடைவெளியைப் பராமரிக்காதது, பொது அல்லது பணியிடங்களில் முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 1,000 வரை அபராதம் விதிக்க சுகாதார, வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அதிகாரம் அளித்திருந்தாா்.
அதன்படி, கரோனா விதிமீறல்களுக்காக ஜூன் 15 முதல் புதன்கிழமை வரையிலான காலத்தில் மொத்தம் 3,54,944 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மாலை 4 மணி வரையிலும் முகக் கவச விதி மீறலுக்காக 1,837 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாத விதிமீறலுக்காக ஜூன் 15 முதல் புதன்கிழமை வரையிலான காலத்தில் மொத்தம் 3,23,233 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் எச்சியல் துப்பியதற்காக புதன்கிழமை மட்டும் மூன்று அபராத நோட்டீஸ்களும், ஜூன் 15 முதல் தற்போது வரையிலும் 2,591 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், புதன்கிழமை சமூக இடைவெளியைப் பராமரிக்கமல் இருந்தமைக்காக 116 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில், ஜூன் 15 முதல் இது வரையிலும் மொத்தம் 29,108 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.