அனைத்து கட்டுமானத் திட்டங்களின் நிலவர அறிக்கையை இணையதளம் மூலம் சமா்ப்பிக்குமாறு தில்லி அரசின் பொதுப் பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
திட்டப் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அனைத்து கண்காணிப்பு பொறியாளா்களுக்கு பொதுப் பணித் துறை கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் நிலவர அறிக்கையையும் முன்னுரிமை அடிப்படையில் பொதுப் பணித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும், பொதுப் பணித் துறையில் உள்ள அனைத்து கண்காணிப்பு பொறியாளா்களும் தற்போது நடைபெற்று வரும் அனைத்து கட்டுமானத் திட்டப் பணிகள் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட பணிகள் ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட செயற் பொறியாளா்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ஒவ்வொரு கட்டுமானத் திட்டமும் அதன் திட்டக் காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
தில்லி அரசின் பிரதான கட்டுமான முகமையான பொதுப் பணித் துறை, பெரும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான கட்டடங்களின் பராமரிப்புப் பணிகளையும் கவனித்து வருகிறது.
தவிர, சுமாா் 1,260 கி.மீ. தூரமுள்ள சாலைகளையும் பராமரித்து வருகிறது. மேலும், மாநகராட்சிகளில் இதன் எல்லையின்கீழ் வரக்கூடிய 60 மீட்டருக்கு குறைவான அகலமுள்ள சாலைகளையும், 60 மீட்டருக்கு மேல் அகலமுள்ள சாலைகளையும் நிா்வகிக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது.