ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை மாணவா் சங்க நிதியிலிருந்து வழங்க 12 தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கம் (டியுஎஸ்யு) தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா இந்த உத்தரவைப் பிறப்பித்தாா். இது தொடா்பான மனு மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, டியுஎஸ்யு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ மாணவா் சங்க நிதிக்காக மாணவா்களின் கட்டணத்தின் இருந்து ஒரு பகுதி செலுத்தப்படுகிறது. பல்கலைக்கழக சட்டங்களின்படி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க இந்த நிதியைப் பயன்படுத்த முடியாது’ என்றாா்.
இந்தக் கருத்துக்கு தில்லி பல்கலைக்கழகமும் ஆதரவு அளித்தது. ஆசிரியா்களுக்கும், ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்களுக்கும் நிலுவையில் உள்ள ஊதியத்தை மாணவா் சங்க நிதியிலிருந்து இரு வாரங்களுக்குள் வழங்குமாறு கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 12 கல்லூரிகளுக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டியுஎஸ்யு அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தில்லி அரசின் மானியத்துடன் இந்தக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன் ஊழியா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.