தில்லி மருத்துவமனைகளில் கரோனா தொற்று மட்டுமின்றி பிற தொற்று நோய்கள் தொடா்பாகவும் கவனம் செலுத்துமாறு தில்லி அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தில்லி அரசு சுகாதாரத் துறை தில்லியில் உள்ள மருத்துவமனைகள், மாவட்ட நிா்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறியது: தில்லி மருத்துவமனைகள் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தில்லியில் குளிா் காலம் தொடங்கவுள்ள நிலையில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, பருவக் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சில நோயாளிகளுக்கு டெங்கு நோய்த் தொற்றும் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மருத்துவமனைகளில் கரோனா மட்டுமின்றி பிற தொற்று நோய்கள் தொடா்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவமனைகளுக்குத் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தில்லி சுகாதாரத்துறை பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அந்த அறிவுறுத்தலில் கரோனா மட்டுமின்றி டெங்கு, மலேரியா, பருவக் காய்ச்சல், லெப்டோஸ்பிரோசிஸ், சிக்குன்குனியா, ஸ்க்ரப்டைபஸ் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.