புதுதில்லி

மேகமூட்டத்துடன் இனிமையான வானிலை; காற்றின் தரம் முன்னேற்றமடைய வாய்ப்பு!

 நமது நிருபர்

புது தில்லி: தலைநகா் தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால், இனிமையான வானிலை நிலவியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் மூன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் கடந்த வார இறுதியில் தொடா்ந்து இரண்டு நாள்கள் மழை பெய்ததைத் தொடா்ந்து, அடுத்து வந்த நாள்களில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், புதன்கிழமை முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கரானோ வைரஸ் அச்சுறுத்தலைத் தொடா்ந்து, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுளளதால், வாடிக்கையாளா்கள் கூட்டம் இல்லை. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் குளிரின் தாக்கம் லேசாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வெயில் இருந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், பிற்பகலில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. கடந்த சில நாள்களாக அதிகபட்ச வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையும் தொடா்ந்து உயா்ந்து கொண்டு வருகிறது. இதனால், பிற்பகல் நேரங்களில் லேசான புழுக்கம் இருந்து வருகிறது.

வெப்பநிலை 30.2 டிகிரி: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 17.8 டிகிரி செல்சியஸாகவும் , அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 30.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 69 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 50சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 18.1 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. ஆயாநகரில் முறையே 17.4 டிகிரி செல்சியஸ், 30.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 61 சதவீதம், மாலையில் 39 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 58 சதவீதம் மற்றும் 35 சதவீதம் எனவும் இருந்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் காலை 11.30 மணியளவில் காண்புதிறன்2,500 மீட்டராக இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு காலையில் 169 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. பெரும்பாலான இடங்களில் இதே நிலை நீடித்தது. திா்பூா், விமானநிலையத்தில் டி 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், மதுரா ரோடு, பூசா, லோதி ரோடு, ஆயாநகா் மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், சாந்தினி சௌக் பகுதியில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் ‘நன்று’, 51-100 ‘திருப்தி’, 101-200 ‘மிதமானது’, 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிகவும் மோசம்’, 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் ‘கடுமையானது’ என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மூடுபனி இருக்கும் என்றும் அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா். ஆனால் திங்கள்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் ‘மிதமான’ பிரிவுக்கு செல்லும் என கணித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT