கரோனா வைரஸ் தொற்று வந்தாலும் வந்தது. மக்கள் கைக்குலுக்கலுக்கு விடைகொடுத்துவிட்டு இந்தியாவில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் "நமஸ்தே' என்று சொல்லும் பழக்கத்துக்கு உலக மக்கள் மாறிவிட்டனர்.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் யாரையாவது வரவேற்க வேண்டும் என்றால், அவர்களைக் கட்டியணைத்து, முத்தம் கொடுத்து அல்லது கைகுலுக்கி மரியாதையுடன் வரவேற்பார்கள். ஆனால், உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் நோய் பரவியிருப்பதால், கைகுலுக்குவது உள்ளிட்ட மரபுகளை மக்கள் கைவிட்டு இந்திய பாணியில் "நமஸ்தே' என்று சொல்லி வரவேற்க ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமல்லாமல், முக்கியப் பிரமுகர்களிடம் சற்று தள்ளி நின்றே பழக ஆரம்பித்துள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்களும், இதர பிரமுகர்களும் ஒருவரைச் சந்திக்கும் போது இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு "நமஸ்தே', "ஹலோ", "ஹாய்', "எப்படி இருக்கிறீர்கள்' என்று இந்திய பாணியில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். "நமஸ்தே' என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் இருந்து உருவானது. அதாவது "நமஸ் - தே' என்பது "நான் உங்களை வணங்குகிறேன்' என்று பொருள்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கரை வரவேற்கும் போது "நமஸ்தே' என்று கூறித்தான் வரவேற்றாராம். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், ஒரு முக்கியப் பிரமுகரை வரவேற்கும் போது கைகுலுக்க முனைந்தவர், திடீரென்று கைகளை விலக்கிக் கொண்டு கைகளை ஒன்று சேர்த்து "நமஸ்தே' என்று கூறினார். இதே பாணியைத்தான் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் மன்னர் பிலிப்பை வரவேற்கும் போதும் பின்பற்றியுள்ளார். இதேபோல், இஸ்ரேல் நாட்டு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவும் "நமஸ்தே' கூற தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த அவர், இந்தியர்களின் "நமஸ்தே'வை செய்தும் காண்பித்தார்.
கரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் ஒரு தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகில் மொத்தம் 4,900 பேர் பலியாகியுள்ளனர். ஏறக்குறைய 116 நாடுகளைச் சேர்ந்த 1,31,500 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். "நமஸ்தே' என்பது ஹிந்துத்துவம் மற்றும் "யோகா' தொடர்புடையது என்று வெப்ஸ்டர் ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவான யோகவைத்தான் இன்று நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றி பயிற்சி செய்து வருகின்றனர். யோகாவில் "நமஸ்தே' என்பது ஒரு முத்திரை. இரு கைகளையும் கூப்பி மார்புக்கு நேரே "நமஸ்தே' என்று தெரிவிப்பதன் மூலம் நமது இதயத்தைப் பலப்படுத்த முடியும் என்கிறார் விநோத் சர்மா என்கிற யோகா மாஸ்டர்.
பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு