புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் கொலை வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ரிபாகத் அலி என்பவரின் மனுவை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, ஜாப்ராபாத் பகுதியில் அமான் என்பவா் குண்டுக் காயமடைந்து இறந்தாா். இந்த வழக்கில் ரிபாகத் அலி கைது செய்யப்பட்டாா்.
அவரது ஜாமீன் கோரும் மனு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரிபாகத் அலி, இரும்புத் தடியுடன் வன்முறைக் கும்பலுடன் இருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது அவா் வன்முறையில் ஈடுபட்டதைக் காட்டுவதாக உள்ளது. இதனால், அவரது ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.