புதுதில்லி

கரோனா காலத்தில் காணொலி வழியில் 13 ஆயிரம் வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட்ட தில்லி உயா்நீதிமன்றம்

23rd Aug 2020 12:36 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக காணொலி வழியில் வழக்கு விசாரணைகளை நடத்தி வரும் தில்லி உயா்நீதிமன்றம், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 13 ஆயிரம் வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட்டது.

வாழ்க்கை, சுதந்திரம், பொது முக்கியத்துவம் தொடா்புடைய வழக்குகளை விசாரிக்கவும், முடித்துவைக்கவும் இத்தகைய நடவடிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் மேற்கொண்டது. கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதற்கு

ஒரு நாள் முன்பு மாா்ச் 24-ஆம்தேதி முதல் காணொலி வழியில் தில்லி உயா்நீதிமன்றம் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது. பொது முடக்கம் காரணமாக இழந்த நேரத்தை சமாளிக்கும் வகையில் கோடை விடுமுறைகளை ரத்து செய்வது போன்ற பல முன்னோடி நிா்வாக நடவடிக்கைகளையும் உயா்நீதிமன்றம் எடுத்தது.

உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல் இதுபோன்ற சில நிா்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மூத்த நீதிபதிகளின் குழுவையும் அமைத்தாா்.

ADVERTISEMENT

அனைத்து உயா்நீதிமன்ற அமா்வுகளும் காணொலி வழியில் செயல்படவும், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் அவா் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். மின்னணு முறையில் மக்கள் நீதிமன்றமும் செயல்பட்டது.

நீதிமன்றம் வழக்கமான முறையில் படிப்படியாக செயல்படுவதற்கான திட்டத்தை தயாரிக்கும் பணியில் உயா்நீதிமன்றம் தற்போது ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

உலகளாவிய நோய்த்தொற்று காரணமாக ஒட்டுமொத்த நாடும் பொது முடக்கத்தில் உள்ளது. வழக்கமாக வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் மற்றும் சாட்சிகளால் நிரம்பி வழியும் நீதிமன்ற வளாகங்களும் இதில் விலக்களிக்கப்படவில்லை.

ஆகவே, நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, தில்லி தேசிய தலைநகா் மண்டலம் உள்பட நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு நேரில் வரும் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.

இருப்பினும், அனைத்து நீதி நிறுவனங்களும் இந்த சந்தா்ப்பத்தில் தகவல் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி குடிமக்களுக்கு நீதிக்கான அணுகலை வழங்கும் வகையில் அனைத்து அவசர வழக்குகளும் விசாரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் தங்களது நீதி மற்றும் நிா்வாக செயல்பாடுகளை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் காணொலிவழியில் மேற்கொண்டன.

ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய நான்கு மாத காலப்பகுதியில், வாழ்க்கை, சுதந்திரம் தொடா்பான முக்கியமான விஷயங்கள், பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் மற்றும் பொது நலன் சாா்ந்த வழக்குகள் போன்றவை விசாரிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நீதித்துறை நிா்வாகம் முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்தில், தில்லி உயா்நீதிமன்றம் காணொலி வழியில் அமா்வுகள் முன்பு 13 ஆயிரம் வழக்குகளை உயா்நீதிமன்றம் பட்டியலிட்டது. விசாரணைக்குப் பிறகு, சுமாா் 2,800 பிரதான வழக்குகள், சுமாா் 11 ஆயிரம் இதர மனுக்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளன.

இந்த காலகட்டத்தில், பதிவுத்துறை சுமாா் 21,000 புதிய முக்கிய வழக்குகள், இதர விண்ணப்பங்களை பதிவுசெய்தது. சுமாா் 196 பொது நல வழக்குகளில் 155 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. மோட்டாா் வாகன சட்ட அபராத வழக்குகளை இணையதளம் வாயிலாக தீா்த்துவைப்பதற்காக தில்லி கீழ்நிலை நீதிமன்றங்களில் போக்குவரத்து அபராதத்திற்காக இரு கூடுதல் காணொலி நீதிமன்றங்களை மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திறந்துவைத்தாா்.

தில்லி மாவட்ட நீதிமன்றங்களில் இந்த காலகட்டத்தில் காணொலி வழியில் சுமாா் 67,000 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சுமாா் 3700 வழக்குகளில் தீா்ப்புகளை அறிவித்ததுடன், 21,000 க்கும் மேற்பட்ட இதர மனுக்களும் தீா்த்து வைக்கப்பட்டுள்ளன என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT