மத்திய தில்லியில் இளம் பெண் மருத்துவர் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்ட ஆண் மருத்துவரை தில்லி போலீஸார் ரூர்க்கியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மத்திய தில்லி, ரஞ்ஜீத் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கரிமா மிஸ்ரா (25). உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரை பூர்விமாகக் கொண்ட இவர், மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் கரிமா இறந்து கிடந்தார். போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
கரிமா மிஸ்ரா குடியிருப்புக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். அதே வீட்டின் மற்றொரு அறையில் மருத்துவரான சந்திர பிரகாஷ் வர்மா, ராகேஷ் என்பவருடன் தங்கியிருந்தார். இரு அறைகளுக்கும் பொதுவான சமயலறை இருந்தது. அறைகளுக்கான வாடகையை மூவரும் பகிர்ந்து அளித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவர் கரிமா மிஸ்ராவைக் கொன்றுவிட்டு மருத்துவர் சந்திர பிரகாஷ் வர்மா தப்பியோடியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சியில் ஒரு பையை தோளில் போட்டுக் கொண்டு வர்மா வேகமாகச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, வர்மாவின் சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம், பரைச் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் குற்றப் பிரிவு போலீஸாரும், மத்திய மாவட்ட போலீஸாரும் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், சந்திர பிரகாஷ் வர்மாவை ரூர்க்கி பகுதியில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரை தில்லிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும், கொலைக்கான உள்நோக்கம் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.