தில்லியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் தனியார் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளதாக தில்லி துணைமுதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சிபிஎஸ்இ பரீட்சைகள் நடைபெற்ற 10 மண்டலங்களில் 3-ஆவது இடத்தை தில்லி மண்டலம் பெற்றுள்ளது. தில்லி அரசுப் பள்ளிகளில் 94.24 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தேசிய தேர்ச்சி விகிதமான 87.17 விட அதிகமாகும்.
தில்லி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. தில்லியில் உள்ள 203 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி அடைந்துள்ளன.
732 அரசு பள்ளிகள் 90 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. தில்லி அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.3 ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.48 ஆகவும் உள்ளது.
தில்லியில் உள்ள முக்கிய தனியார் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்துள்ளனர். துவாரகா செக்டார்-10, துவாரகா செக்டார்-19, காந்தி நகர் ஆகிய இடங்களில் உள்ள தில்லி அரசின் ஆர்பிவிவி (ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா) பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.