ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சவூதி அரசு நடந்து கொள்வதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷியா முஸ்லிம்கள் தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"மஜ்லீல்- இ- உலாமா -இ- ஹிந்த்' எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லியில் வாழும் நூற்றுக்கணக்கான ஷியா பிரிவு முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். அப்போது, மகாராஷ்டிரத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக மஜ்லீல்- இ- உலாமா- இ- ஹிந்த் அமைப்பின் செயலர் அபித் அப்பாஸ் கூறியது:
சவூதி அரேபியாவை ஆளும் ஷன்னி பிரிவு அரச குடும்பம், ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் ஈடுபடுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் சவூதியில் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சில நாள்களுக்கு முன்பு 37 அப்பாவி ஷியா முஸ்லிம்களை தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சவூதி அரசு தலையைத் துண்டித்தது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் சவூதி அரசை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.