"நான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக பொய்யான தகவலைப் பரப்பி வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது வழக்குத் தொடர்வேன்' என்று பாஜகவின் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் தெரிவித்தார்.
"தனித் தொகுதியான வடமேற்குத் தில்லி மக்களவைத் தொகுதியில், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் போட்டியிட முடியாது' என்று ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் அளித்த பேட்டி:
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபடுகிறார்கள். நான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக கேஜரிவால் உள்ளிட்ட அக்கட்சியினர் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள். நான் வால்மீகி சமூகத்தில் பிறந்தேன். வால்மீகியை வணங்கி வருகிறேன்.
நான் இந்து மதத்தைவிட்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருந்தால் என்னை எனது தாயாரே கொலை செய்திருப்பார். என் மீது அபாண்டாமான பொய்களைப் பரப்பி வரும் கேஜரிவால் மீது வழக்குத் தொடர உள்ளேன் என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி தேர்தல் அலுவலகத்தில் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.