தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் சேர்க்கை குறித்து பேசி வரும் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி தமிழ் மாணவர்கள் சங்கத்தினர் தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தொலைபேசி அழைப்புகள் சிலருக்கு வருகிறது. அதில், "தில்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 500 தமிழ் மாணவர்கள் சேருகின்றனர். இதனால், தில்லி மாணவர்களுக்கான வாய்ப்பு குறைகிறது' என முதல்வர் கேஜரிவால் பேசுவதாக உள்ளது. அந்த அழைப்பில் எந்தவொரு கல்லூரியையும் அவர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது மாணவர்கள் மத்தியில் வேற்றுமையை உருவாக்கும் வகையில் உள்ளது.
தில்லி முதல்வரின் இதுபோன்ற செயல்பாடு தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறுவதுடன், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் உள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தில்லிப் பல்கலைக்கழகத்தில் தில்லி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் கேஜரிவால் உறுதி அளித்து வருகிறார்.
தில்லி பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகம் எனத் தெரிந்திருந்தும் இதுபோன்ற வாக்குறுதியை அவர் அளித்து வருகிறார். தேர்தல் நடத்தை நெறிமுறைகளின்படி எந்தவொரு குறிப்பிட்ட மாநிலத்தின் மாணவர்களையும் பிரசாரத்தில் குறிப்பிடக்கூடாது. எனவே, அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.