தில்லியில் நீடித்து வரும் கடுமையான வெப்பநிலை காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் பாதுகாவலர்கள் மாறும் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் பாதுகாவலர்கள் மாறும் (சேஞ்ச் ஆஃப் கார்டு) நிகழ்ச்சி, கடுமையான பருவநிலை காரணமாக மே 5-ஆம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளது. எனினும், சனிக்கிழமை நடைபெறும் பாதுகாவலர்கள் மாறும் நிகழ்ச்சி வழக்கம் போல காலை 10 மணி முதல் 10 .40 மணி வரை (நவம்பர் 15 முதல் மார்ச் 14 வரை) காலை 8 மணியில் இருந்து 8 .40 மணி வரை (மார்ச் 15 முதல் நவம்பர் 14 வரை) நடைபெறும்.
இந்த நிழ்ச்சியைக் காண வருவோர் இது தொடர்பான தகவலை https://rb.nic.in/rbvisit/rbvisitcog.aspx எனும் இணையதளத்தில் பார்வையிட்டு அண்மைக்கால தகவலை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நெடுங்காலமாக இந்த ராணுவப் பாரம்பரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் இசைக் கருவிகள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதை உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் பார்வையிடுவது வழக்கம்.