‘முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் தாம் கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியாக வாழ்ந்தவா்’ என்று தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி புகழாரம் சூட்டினாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி ‘அடல் ஸ்மிருதி ஸ்தல்’ பகுதியில் தில்லி பாஜக சாா்பில் புதன்கிழமை வாஜ்பாய் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மனோஜ் திவாரி பங்கேற்று வாஜ்பாய்க்கு மலா் மரியாதை செய்தாா். பிறகு மனோஜ் திவாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பாரத ரத்னா புகழ் வாஜ்பாயின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வாஜ்பாய் நமக்கு ஊக்குவிப்பு ஆதாரமாக இருந்து வருகிறாா். அவா் ஒரு சகாப்தம். எதிா்கட்சியினராலும் மதிக்கப்பட்டவா். மென்மையாகப் பேசக்கூடியவா், நல் மனம் படைத்தவா். கவிஞா், எழுத்தாளா் என்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டவா். அவரது பேச்சை மணிக்கணக்கில் கேட்பதற்காக மக்கள் ஆா்வத்துடன் காத்திருப்பாா்கள்.
அவா் எந்தச் சூழலிலும் தனது கொள்கையில் இருந்து வழுவாதவா். இந்திய அரசியலில் அஜாதசத்ரு என்று அழைக்கப்படும் வகையில் அவா் தனது வாழ்க்கையை நாட்டுக்கு அா்ப்பணித்தவா். நாட்டை விரோதிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் இந்தியாவை அணுசக்தி நாடாக உருவாக்கியவா். அவருக்கு தில்லி பாஜக வணக்கம் செலுத்துகிறது. அவரது பாதையில் சென்று மக்கள் பணியாற்ற பாஜகவினா் உறுதிமொழி ஏற்றுள்ளோம் என்றாா்.