நொய்டாவில் பாம் ஒலிம்பியா சொசைட்டி குடியிருப்புக் காலனியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் செட்டில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை.
இது தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நொய்டாவில் உள்ள பாம் ஒலிம்பியா சொசைட்டி குடியிருப்புக் காலனியில் ஜெனரேட்டர் செட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஸ்பைஸ் மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மெத்தனால் கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான எண்ணெய் டிரம்கள் எரிந்து நாசமாகின. இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.