தில்லியில் வெங்காய வரத்து தொடர்பாக தினந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தில்லி உணவு வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெங்காய வரத்து தொடர்பாக அமைச்சர் இம்ரான் ஹுசைன் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழையால் தில்லிக்கு வெங்காய வரத்துக் குறைந்திருந்ததாகவும், தற்போது, நிலைமை சீரடைந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அமைச்சரிடம் கூறினார்கள். மேலும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கினர். தற்போது தில்லிக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறினார்கள். அப்போது, வெங்காய வியாபாரிகள், முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துமாறும், வெங்காய வரத்து தொடர்பாக தினம்தோறும் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அமைச்சர் உத்தரவிட்டார் என்றனர்.