நாட்டின் முதலாவது பெண் டிஜிபியான காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யாவின் (72) மறைவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1973- ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர் காஞ்சன் செளத்ரி. அவர் கடந்த 2004- இல் உத்தரகண்ட் மாநிலத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெற்றார். சுமார் 3 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய காஞ்சன் செளத்ரி, கடந்த 2007, அக்டோபர் 31-இல் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்.
அதன் பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சி சார்பாக கடந்த 2014-இல் உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், மும்பையில் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அவர் காலமானார். அவருக்கு கேஜரிவால் தனது சுட்டுரையில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேஜரிவால் கூறியிருப்பதாவது:
நாட்டின் முதலாவது டிஜிபி காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா காலமானது தொடர்பாக அறிந்து வருந்துகிறேன். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்கள் பணியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார். தனது இறுதி மூச்சு வரை நாட்டுக்காக அவர் உழைத்தார் என்று தெரிவித்துள்ளார் கேஜரிவால்.