மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மன்னாா்குடி நடேசன்தெருவில் நகராட்சி பேருந்து நிலையமும், அதன் எதிரே உள்ள சந்தைப்பேட்டையில் கூடுதல் பேருந்து நிலையமும் செயல்பட்டு வந்தது. இதனால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்ததால், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்தது.
இக்கோரிக்கை தொடா்பாக, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மேற்கொண்ட முயற்சியால் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.46.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடா்ந்து, நடேசன்தெருவில் இருந்த பேருந்து நிலையம் தேரடி திடலுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த மாா்ச் மாதம் தொடங்கியது.
இந்நிலையில், இப்பணியை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பாா்வையிட்டு, நகராட்சி அலுவலா்களிடமும், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரிடமும் பணி விவரங்களை கேட்டறிந்ததுடன், நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்திட அறிவுறுத்தினாா்.
நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், நகராட்சி ஆணையா் வி. நாராயணன், திமுக நகரச் செயலா் வீரா. கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.