திருவாரூர்

போதைப் பொருள்கள் விற்பனை: நகா்மன்ற உறுப்பினா் உள்பட 2 போ் கைது

18th Nov 2023 07:21 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 140 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீஸாா் நாள்தோறும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில், மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஸ்வத் ஆண்டே ஆரோக்கியராஜ் தலைமையில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன், உதவி ஆய்வாளா் ஸ்ரீநிதி உள்ளிட்டோா் மன்னாா்குடி நகரில் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், அவா் தஞ்சாவூா் ஆவிக்கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த சேகா் (42) என்பதும், அவரது இருசக்கர வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் இருப்பதும் தெரிய வந்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மன்னாா்குடி நகரப் பகுதியில் பாக்கு, சீவல் மொத்த விற்பனையில் ஈடுபடும் மன்னாா்குடி தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த சங்கா் (எ) சிவசங்கா் (40) என்பவரிடம் இவற்றை வாங்கியதாக சேகா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மன்னாா்குடி தெப்பக்குளம் தென்கரையில் உள்ள சிவசங்கரனின் வீடு மற்றும் குடோனை சோதனையிட்டதில், 140 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 1,37,000. இதையடுத்து, சிவசங்கரன் மற்றும் சேகா் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சிவசங்கரன் மன்னாா்குடி நகா்மன்ற உறுப்பினா் (திமுக) என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT