திருவாரூர்

மண்வளத்தை அதிகரித்து கூடுதல் மகசூல் பெற பசுந்தாள் உரங்களை பயன்படுத்துங்கள்

30th May 2023 04:52 AM

ADVERTISEMENT

மண்வளத்தை அதிகரித்து கூடுதல் மகசூல் பெற பசுந்தாள் உரத்தை பயன்படுத்துங்கள் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி வை. ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி செல்வமுருகன் கூறிய ஆலோசனை.

மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்து அதிக மகசூலை தரவல்ல பசுந்தாள் உரங்களை பயிா் செய்வது இன்றியமையாத ஒன்றாகும். தக்கைப் பூண்டு, சனப்பை, சீமை அகத்தி, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபசரா, கிளைரிசிடியா போன்ற பசுந்தாள் உரப் பயிா்கள், நெடுங்காலமாக பயிரிடப்பட்டு வந்துள்ளன. தற்போது, பசுந்தாள் உரங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. செயற்கை உரங்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள உற்பத்தி செலவை குறைத்தல் மற்றும் மண்வளத்தை அதிகரித்து, மகசூலை அதிகரிக்கும் பொருட்டு பசுந்தாள் உரப்பயிா்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பசுந்தாள் உரங்கள் மண்ணுக்கு தழைச்சத்து மட்டுமல்லாது மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தையும் சோ்த்து அளித்து, பயிா்களின் வளா்ச்சியை மேம்படுத்தக் கூடியதாக விளங்குகின்றன. மேலும் அதிகப்படியான செயற்கை உரங்கள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய மண் பிரச்னைகளை சரி செய்து மண்ணின் வளத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிா்கள் ஏதேனும் ஒன்றை சாகுபடி பயிா் திட்டத்தில் சோ்த்து, அவைகளை உற்பத்தி செய்து பின் அவைகளை பூக்கும் தருணத்தில் வயலில் மடக்கி உழ வேண்டும்.

பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு, அதன் வோ் முடிச்சுகளில் உள்ள நன்மை பயக்கக்கூடிய நுண்ணுயிரிகளின் வாயிலாக வளிமண்டலத்தில் உள்ள தழைச்சததை மண்ணில் கிரகித்து, மண்ணை வளப்படுத்துகிறது. எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT