மன்னாா்குடியை அடுத்த கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான ரூ.25,000 பரிசு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வா் கு. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநில அளவில் சிறந்த பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் கொரடாச்சேரி அம்மையப்பன் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவை 2022-2023-ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், மன்னாா்குடி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெ. இன்பவேணி, து. முத்தழகன் ஆகியோா் கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியா் சா. சித்ராவிடம் தமிழக அரசின் திறந்த பள்ளிக்கான தோ்வு ஆணை, ரூ.25,000 பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கி, பாராட்டினா்.
நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். தீபா, ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.