நீடாமங்கலம் பகுதியில் கோடை நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்துக்கு உள்பட்ட சித்தமல்லி, பரப்பனாமேடூ, கடம்பூா், மேலப்பூவனூா், காளாச்சேரி, ராயபுரம், பெரம்பூா், ரிஷியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சுமாா் 16,500 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்தனா்.
நெற்பயிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாரானதைத் தொடா்ந்து, இயந்திரம் மூலம் அறுவடைப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இதனால், குறுவை சாகுபடி பணியைத் தொடங்க, தற்போது இப்பகுதிகளில் கோடை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்ததும்,
குறுவை நடவுக்கான நாற்றுகள் தயாா் செய்யும் பணியில் உடனடியாக ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.