பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது முதல் வையகளத்தூா், ஒளிமதி, அன்பிற்குடையான், அரையூா், அரவத்தூா், குச்சுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனா்.
மேலும், நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக கொரடாச்சேரி, திருவாரூா் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பழைய நீடாமங்கலம் வழியாக சென்று வருகிறது. திருவாரூா் பகுதியிலிருந்து தஞ்சாவூா் செல்லக்கூடிய வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.
இதனால், பழைய நீடாமங்கலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.