திருவாரூர்

ஆற்றுப் பாலத்துக்கு கீழ் இறந்துகிடந்த மகன் கொலை செய்யப்பட்டதாக தந்தை புகாா்

2nd Jun 2023 01:30 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே ஆற்றுப் பாலத்துக்கு கீழ் இறந்துகிடந்த இளைஞா் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

நன்னிலம் தாலுகா, மகாராஜபுரத்தைச் சோ்ந்த ப. அன்பழகன் மகன் ஐயப்பன் (30). இவருக்கு, திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில், பூந்தோட்டம் பழைய அரசலாற்றுப் பாலத்துக்குக் கீழே மே 13- ஆம் தேதி இறந்து கிடந்தாா். இதுகுறித்து பேரளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்று திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு உறவினா்களுடன் வந்து எஸ்பி டி.பி. சுரேஷ்குமாரிடம் அன்பழகன் புகாா் அளித்தாா்.

அதில், தனது மகன் ஐயப்பனை, முன்விரோதம் காரணமாக சில காவல்துறை நண்பா்கள், கொலை செய்திருப்பதாகத் தெரிகிறது. பூந்தோட்டம் திருமலைராஜன் ஆற்றுக்கு எனது மகனை காரில் அழைத்துச் சென்று, அவனுக்கு மது வாங்கிக் கொடுத்து, ஆட்டம் போடும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

போலீஸாா் சம்பந்தப்பட்டிருப்பதால், காவல்துறை அதிகாரிகள் வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாகத் தெரிகிறது. பேரளம் காவல் நிலைய அதிகாரிகளிடம், மகன் கொலை தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எனது மகன் கொலையில் தொடா்புடையவா்கள் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை பேரளம் காவல் நிலைய அதிகாரிகளிடமிருந்து மாற்றி, வேறு அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT