நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 48 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தை ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தொடங்கினா்.
நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவியாளா்கள், இளநிலை உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாற்றுப்பணியில் உள்ளவா்களை உரிய இடத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும், ஊராட்சி செயலா்களை அடிக்கடி பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைளை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கைளை வலியுறுத்தி 48 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தப் போராட்டம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கியது.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் நேரு, ராமமூா்த்தி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.