திருவாரூா் அருகே காட்டூா் அபிராமி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கடந்த திங்கள்கிழமை கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள் நிறைவுபெற்று, பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றன.
தொடா்ந்து, மல்லாரி இசை முழங்க யாகசாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. கடங்களை சுமந்து கோயிலை வலம் வந்த சிவாச்சாரியா்கள், மேற்குராஜ கோபுரம், தெற்கு கோபுரம் மற்றும் சுவாமி சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் செய்வித்தனா்.
பின்னா், சுந்தரேஸ்வரா், அபிராமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.