தேவைக்கேற்ப கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக திருவாரூா் மண்டல முதுநிலை மேலாளா் ராஜராஜன் தெரிவித்தாா்.
குடவாசல், நன்னிலம் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகங்களை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
விவசாயிகளின் நலன் கருதி கடந்த ஆண்டுகளை விட நிகழாண்டு அதிக எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 15-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு பாசனத்திற்காக மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால், முன்பட்ட சம்பா அறுவடையைக் கணக்கில் கொண்டு டிசம்பா் 30- ஆம் தேதியும், ஜனவரி 6-ஆம் தேதியும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சனிக்கிழமை பகல் வரை 50,000 டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எவ்வித குறையும் ஏற்படாத வண்ணம் கொள்முதல் பணியில் ஈடுபடும்படி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொள்முதல் நிலையங்கள் நியாயமாகத் தேவைப்படும் இடங்களில் அரசின் அனுமதி பெற்று உடனடியாகத் திறக்கப்படும் என்றாா்.