வலங்கைமான் வட்டாரம் நாா்த்தங்குடியில் உழவன் செயலியை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை விளக்கம் அளித்தனா்.
தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை வேளான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் வலங்கைமான் வட்டாரத்தில் களப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். உழவன் செயலியில் மானியத் திட்டங்கள், பயிா்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, இடுபொருள் முன்பதிவு, வானிலை நிலவரம், சந்தையில் விளைபொருள்களின் விலை நிலவரம் உள்பட 21 வகையான செய்திகளை அறிந்துகொள்ளலாம் என விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.
மேலும், கைப்பேசிகளில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினா். இதில் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.