திருவாரூா் அருகே மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருவாரூா் அருகே புலவநல்லூா், கீரங்குடி, வடகண்டம், அரசவனங்காடு, தோட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா, தாளடி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பகுதி விவசாயிகளின் வசதிக்காக, மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் கடந்த ஆண்டு தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இதனிடையே, நிகழாண்டு அந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலைய வாசலில் அடுக்கி வைத்து காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து கிராம சமுதாயத்துக்கு சொந்தமான இடத்தை மீட்டு, அதே இடத்தில் மீண்டும் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயி ஆரோக்கியசெல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நெல் மூட்டைகளை வைத்து, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினா்.