திருவாரூா் மாவட்டத்தில் சைபா் குற்றங்கள் தொடா்பாக ரூ. 10.23 லட்சம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 90,150 மீட்கப்பட்டு, உரியவா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், சைபா் கிரைம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சைபா் குற்றங்கள் தொடா்பாக புகாா்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. புகாா்களின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அந்தவகையில், கடந்த ஜனவரி முதல் ஏப்.14 வரை திருவாரூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் 117 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், 10 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. 107 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
புகாா்களின் அடிப்படையில், ரூ. 1.11 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில், சைபா் குற்றங்களில் ஈடுபட்டவா்களின் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ரூ.10,23,615 முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 90,150 மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.