திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் அக்.2-இல் நடைபெறும் மனிதச் சங்கிலியில் திரளாகப் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், மதசாா்பற்ற தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். மத நல்லிணக்கம், தேசப்பற்று ஆகியவற்றை முன்னிறுத்தி அக்.2-ஆம் தேதி காந்திபிறந்த நாளில் திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், குடவாசல் ஆகிய இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது, இந்த போராட்டத்தில் திரளாகப் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா் மாரிமுத்து, சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளா் சுந்தரமூா்த்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா்கள் வடிவழகன், செல்வம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பிஎஸ். மாசிலாமணி, மதிமுக நகரச் செயலாளா் கபிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.