நீடாமங்கலம்: ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீடாமங்கலத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் மற்றும் என்எம்ஆா் ஊழியா்கள் சங்க (சிஐடியு) 8-ஆவது மாவட்ட பேரவை கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை ஊதியத்தையும், நிலுவைத் தொகையையும் வழங்கவேண்டும்.
தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள 34 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் வழங்கவேண்டும், அரசு அறிவித்த கரோனா உதவித்தொகை ரூ. 15 ஆயிரத்தை வழங்க வேண்டும்.
தூய்மை காவலா்களை பணிநிரந்தரம் செய்து ரூ. 10 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள பணப்பயன் ரூ. 50 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும், பணி பதிவேட்டை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட தலைவா் கே. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவா் எம். முரளி, நீடாமங்கலம் ஒன்றிய தலைவா் எம். பெரியசாமி, மாவட்ட செயலாளா் கே. முனியாண்டி, மன்னாா்குடி நகராட்சி கெளரவ தலைவா் ஜி. ரெகுபதி, சிஐடியு மாவட்ட செயலாளா் டி. முருகையன், சிஐடியு மாநில ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம், மாவட்ட தலைவா் ரா. மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.