திருவாரூா் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 87,200 போ் பயனடைந்துள்ளனா் என்று ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் 4-ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:
உயிா் காக்கும் மருத்துவ சிகிச்சைகளை பொதுமக்கள் கட்டணமில்லாமல் பெறும் நோக்கில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் 2009-இல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் 2018 முதல் ஒருங்கிணைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை உள்பட 1090 சிகிச்சைகளுக்கும், 8 தொடா் சிகிச்சைகளுக்கும், 52 பரிசோதனைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 87,200 போ் பயனடைந்துள்ளனா். இவா்களின் சிகிச்சைக்கு தமிழக அரசால் ரூ.159.36 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், கூத்தாநல்லூா், விஜயபுரம், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 9 அரசு மருத்துவமனைகளிலும், 5 தனியாா் மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
முன்னதாக, 5 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயனடைந்த 5 பேருக்கு ஆறுதல் பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருவாரூா் மெடிக்கல் சென்டா் ஆகியவற்றுக்கும், இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4 தொடா்பு அலுவலா்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
நிகழ்வில், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) செல்வகுமாா், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் லோகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.