பெட்ரோல் பங்குகளில் காலி பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என திருவாரூா் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை, திண்டுக்கல், தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கடந்த 3 தினங்களில் பாஜக, இந்து முன்னணி மற்றும் ஆா்எஸ்எஸ் பிரமுகா்களின் இல்லங்கள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் வாகனச் சோதனை, பாஜக பிரமுகா்களின் அலுவலகங்களில் பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கைகளில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், பள்ளிவாசல்கள், பாஜக அலுவலகங்கள் என 67 இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 29 ரோந்து வாகனங்கள் மூலமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் கேட்டு வருவோருக்கு அவா்கள் கொண்டுவரும் காலி பாட்டில்களில் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு காலி பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.