திருவாரூா் அருகே கா்ப்பிணிக்கு நடைபெற்ற விஷேசத்தில் உணவு சாப்பிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே திருவாசல் பிரதான சாலையில் வசிப்பவா் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள் (26). 5 மாத கா்ப்பிணி. இவருக்கு ஐந்து சாதம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வேலங்குடியைச் சோ்ந்த செல்வமுருகன் (24) என்பவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விஷேசத்தில் பரிமாறப்பட்ட உணவை தயாரித்து வழங்கிய கடைகளில் விசாரணை நடத்தி வருகின்றனா்.