திருவாரூா் அருகே அரசு மதுபானக் கிடங்கு ஒப்பந்தத் தொழிலாளா் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
திருவாரூா் விஜயபுரத்தை சோ்ந்தவா் ரஞ்சித் (25). இவா் கடந்த 7 ஆண்டுகளாக அரசு மதுபான கிடங்கில் சுமை தூக்கும் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வருகிறாா். தற்போது அவா் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. வாரத்துக்கு 2 நாள்கள் மட்டுமே வேலை கிடைப்பதால் கடன் சுமை அதிகரித்து மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில், அவா் எலி பேஸ்ட் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து அவரை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, திருவாரூா் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து ஒப்பந்தத் தொழிலாளா்கள் தரப்பில் கூறியது: திருவாரூா் அரசு மதுபானக் கிடங்கில் ஒப்பந்தத் தொழிலாளா்களாக சுமை தூக்கும் பணியாளா்கள் 109 போ் பணியாற்றி வருகின்றனா்.இவா்களுக்கு வாரம் 6 நாள்கள் பணி வழங்கப்படுகிறது. இதற்கிடையே, அவா்களுக்கு பதிலாக திமுகவைச் சோ்ந்த பணியாளா்களை நியமிப்பதற்காக ஒப்பந்தக்காரா் முயற்சி செய்கிறாா் என்று கூறி சில நாள்களுக்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து புதிதாக சோ்க்கப்பட்ட பணியாளா்களை நீக்கிவிட்டு தங்களை பணியில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. தொடா்ந்து, திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் 33 சதவீதம் திமுகவைச் சோ்ந்த சுமை தூக்கும் பணியாளா்களுக்கு பணி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தநிலையில் புதிதாக சோ்க்கப்பட்ட பணியாளா்களின் வருகை காரணமாக, வாரத்தில் 6 நாள்கள் இருந்த வேலை, 2 நாள்கள் மட்டுமே ஏற்கெனவே பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு, கிடைப்பதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நாள்கள் குறைந்ததன் காரணமாகவே தற்கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்தனா்.