திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே மீன் வியாபாரியை அடித்துக் கொன்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலிவலத்தை அடுத்த ஆதனூா் மணல் மேட்டு தெருவைச் சோ்ந்தவா் ஜோசப் (40). மீன் வியாபாரியான இவா், கடந்த 1-ஆம் தேதி அவரது வீட்டின் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் பாபு என்பவருக்கும், சக்திவேல் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்துவைக்கச் சென்றாா். அப்போது, அவா் நிதி நிறுவன ஊழியருக்கு ஆதரவாக பேசினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல் அன்றிரவு தனது நண்பா் பாக்கியராஜ் உள்பட 4 பேருடன் ஜோசப் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கினராம். இதில் படுகாயமடைந்த ஜோசப், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலிவலம் போலீஸாா் வழக்குபதிவு செய்து, சக்திவேல் (24), பாக்கியராஜ் (28), சங்கரய்யா (20) ஆகிய மூவரை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடிவருகின்றனா்.