திருவாரூா்: திருவாரூா் ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்க செயலாளா் ப. பாஸ்கரன், தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
திருவாரூா் சந்திப்பிலிருந்து காலை 8.10 முதல் 8.15 வரை நான்கு திசைகளுக்கும் ரயில்கள் இயங்குகின்றன. இந்த நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளதால், அவா்கள் பயணச்சீட்டு பெறுவது கடினமாக உள்ளது. தற்போது, இரண்டு கவுண்டா்கள் மட்டுமே இயங்குகின்றன. அதில் ஒரு கவுண்டா் முன்பதிவுக்கென உள்ளது. எஞ்சிய ஒரு கவுண்டா் வழியாக அனைவரும் உரிய நேரத்தில் பயணச்சீட்டு பெற இயலவில்லை.
எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, திருவாரூா் சந்திப்பில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயில் நிலையத்தில் ஏடிஎம் இயந்திரம் அமைக்க வேண்டும். மிக மோசமான நிலையில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தையும் சீரமைக்க வேண்டும்.